ஸ்ரீநடராஜர் கோயில் சிவகாமிஅம்மன் தேர் ரூ.50 லட்சம் செலவில் புணரமைப்பு!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகாமி அம்மன் தேர் ரூ.50 லட்சம் செலவில் புணரமைக்கப்படுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகாமி அம்மன் தேர் ரூ.50 லட்சம் செலவில் புணரமைக்கப் படுகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு மொத்தம் 5 தேர்கள் உள்ளது. இதில் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும், ஸ்ரீசிவகாமிஅம்மனுக்கும் பெரியத் தேர்களாகும். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய மூவருக்கும் சிறிய தேர்கள் உள்ளது. ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆண்டுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் ஆகிய இரு உற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தில் 9-ம் நாள் திருவிழாவாக தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தேர் உற்சவத்திற்கான செலவுத்தொகையினை பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படுகிறது. ஸ்ரீநடராஜர் மற்றும் ஸ்ரீசிவகாமி அம்மன் தேர்களை பச்சையப்பன் அறக்கட்டளை பராமரிப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீசிவகாமி அம்மன் தேர் பழுதுற்றுள்ளதால், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீசிவகாமி அம்மன் தேரை புணரமைக்க பச்சையப்பன் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஸ்ரீசிவகாமி அம்மன் தேரை புணரமைக்க காஞ்சிபுரம், மயிலாடுதுறை பகுதியிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டி.என்.சேஷன் நேரடி மேற்பார்வையில் பொறியாளர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீசிவகாமி அம்மன் தேர் முற்றிலுமாக பிரிக்கப்பட்டு, புதிதாக புணரமைக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ள தேர் மற்றும் தரிசன உற்சவத்திற்குள் தேர் புணரமைக்கப்படும் என கோயில் பொதுதீட்சிதர்கள் தெரிவித்தனர்.