சேலம் அன்னதானப்பட்டியில் முன் விரோதம் காரணமாக 6 பேர்களை அரிவாளால் வெட்டி காயப்படுத்திய 9 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:
அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் வேலன் (36). பெயிண்டரான இவர், 49-வது வார்டு தேமுதிக செயலராகவும் உள்ளார். இவருக்கும் அல்லிகுட்டை காலனியைச் சேர்ந்த சாதுராஜ் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு அன்னதானப்பட்டி, எல்லை காளியம்மன் கோயில் பகுதியில் நடந்து சென்ற வேலனின் உறவினர் ராஜூ (31) என்பவரை ஒரு கும்பல் வெட்டி காயப்படுத்தியது. இதையறிந்து அங்கு சென்ற வேலன், இவரது தம்பி சின்னராஜ் (25), உறவினர்கள் சதீஷ்குமார், ஹரி, பிரபு ஆகிய 6 பேர்களையும் அந்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது.
இதில் காயமடைந்த 6 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வேலன் அளித்த புகாரின் பேரில் சாதுராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகிறார்.
அன்னதானப்பட்டி பகுதியில் கடந்த 8-ம் தேதி காரில் சென்றவர்களை வழிமறித்து முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டியது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு கோஷ்டி மோதல் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.