திருக்கோவிலூர் மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டு விழா: அடிதடியால் பரபரப்பு
திருக்கோவிலூரில் இன்று காலை அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக அமைச்சர் மோகன் உள்
திருக்கோவிலூரில் இன்று காலை அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழக அமைச்சர் மோகன் உள்ளிட்ட கட்சியினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கே வந்திருந்தனர்.
அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்நிலையில் தேமுதிகவினர் சுமார் 30 பேர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் அரசு பொது நிகழ்ச்சி என்பதால் அங்கே கூடியிருந்தனர். அமைச்சர் மருத்துவமனைக்குள் நுழைந்ததும், தேமுதிகவினர் கட்சிக் கொடிகளுடன் மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தனர். இதனைக் கண்ட அமைச்சர், கட்சிக் கொடிகளுடன் யாரும் உள்ளே வரக்கூடாது என்று கூறினாராம். இதை அடுத்து அங்கே திரண்டிருந்த அதிமுகவினர், தேமுதிகவினரிடம் இருந்து கட்சிக் கொடிகளைப் பிடிங்கி கிழித்து எறிந்துள்ளனர். இதனால் அங்கே இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனிடையே, தேமுதிக தொண்டர்கள் குறைந்த அளவே அங்கு இருந்ததால், அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். அதன்பின்னர் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைதியாக நடந்து முடிய வேண்டிய ஓர் அரசு நிகழ்ச்சி இன்று காலை கொடிப் பிரச்னை காரணமாக சில மணித்துளிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.