காங்கிரஸ் கட்சியினரின் நீர்மோர் பந்தலை தீ வைத்து கொளுத்தியதாக கூறப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர் ஒருவர் சிதம்பரம் அருகே மரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அருகே வண்டிகேட் வாய்க்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை (52). விவசாய கூலித்தொழிலாளியான இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் மரத்தில் உடலில் காயத்துடன் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறந்து போன அண்ணாதுரை மீது கிள்ளை காவல் நிலையத்தில் கடந்த மே 20-ம் தேதி வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் கே.ஐ.மணிரத்தினத்தால் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தீவைத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2வது நபராகும். இந்நிலையில் அவர் மர்மமான நிலையில் மரணமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை, அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அண்ணாதுரை அடித்துக் கொலை செய்யப்பட்டு, தூக்கு மாட்டப்பட்டுள்ளார். எனவே போலீஸார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்காத பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட்டில் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.