அறுந்து கிடந்த மின்சார ஒயரை மிதித்து இருவர் சாவு: கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆறுதல்
சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்து இறந்த இருவர் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கொக்கு பிடிக்கச் சென்ற போது வயலில் கிடந்த மின்சார ஒயரை மிதித்து இறந்த இருவர் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
சிதம்பரத்தை அடுத்த வேளக்குடியில் வசிப்பவர் ஹரிதாஸ் (38). இவரது மனைவியின் தங்கை கணவர் சுப்பிரமணியன் (33) ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு அருகாமையில் உள்ள அக்கரை திட்டுக்காட்டூர் பகுதியில் கொக்கு பிடிக்க வயல்வெளிக்கு சென்றுள்ளனர். வயல்வெளிக்கு சவுக்குதோப்பு வழியாக சென்ற போது அறுந்து கிடந்த மின்சார ஒயரை சுப்பிரமணியன் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற ஹரிதாஸ் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உடல் கருகி இறந்தனர். இதில் சுப்பிரமணியனின் மனைவி சாந்தி மனநிலை பாதிக்கப்பட்டார். தகவல் அறிந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் சென்று இருவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மின்வாரிய அதிகாரிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். மேலும் அப்பகுதியில் சாய்ந்து அறுந்து கிடக்கும் மின் கம்பங்களை உடனே சரிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். எம்எல்ஏவுடன் குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.