காமராஜர் சிலைக்கு வேட்டி ஜிப்பா அணித்த தொண்டர்!
தீபாவளி அன்று உறவினர்களுக்கும் குடும்பத்தார் குழந்தைகள், இன்னும் சிலர் ஆதரவற்றோர் இல்லங்கள் முதியோர்க்கு புத்தாடை எடுத்து அணிவிப்பது வழக்கம். இதில் ஆச்சரியம் ஏதும் இருக்காது.
ஈரோட்டில் உள்ள காமராஜர் உருவச் சிலைக்கு தீபாவளி புத்தாடை அணிவிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனை அருகே எம்ஜிஆர் சிலை சிக்னல் உள்ளது. இந்த இடத்தில் பிரப்சாலை, மேட்டூர் சாலை, ஈ.வி.என். சாலை, பெருந்துறை சாலை ஆகிய 4 சாலைகள் சந்திக்கின்றன. இந்த சந்திப்பில் எம்.ஜி.ஆர்., காமராஜர் ஆகியோரின் முழுஉருவச்சிலைகளும், ஈவிகே.சம்பத்தின் மார்பளவுச்சிலையும் உள்ளன.
காமராஜரின் முழுவுருவச்சிலை அப்போதைய ஜனதாதளம் கட்சியின் ஈரோடு நகர கிளையால் 10.12.1976-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலர் எஸ்.வி.லட்சுமணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அன்றைய மாநிலப் பொதுச்செயலர் குமரி ஆனந்தன் இச்சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.
அதைத்தொடர்ந்து 18.5.1977-ல் அப்போதைய மத்திய மின்துறை அமைச்சர் பா.ராமச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அன்றைய பிரதமர் மொராஜ்ஜி தேசாய் இச்சிலையை திறந்துவைத்தார்.
தேசிய விழாக்கள் மற்றும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிளின்போது இச்சிலைக்கு காங்கிரஸ், ஜனதாதளம் மற்றும் பிற அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளியையொட்டி காமராஜர் சிலைக்கு யாரோ ஒருவர் வேட்டி, ஜிப்பா, துண்டு அணிவித்துள்ளார்.
தீபாவளி தினமான சனிக்கிழமை இந்த புத்தாடை அணிவிக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை இரவு தான் இந்த உடையை யாரோ அணிவித்துள்ளனர். புத்தாடையை பார்க்கும்போது சிலைக்கு அளவு எடுத்து அதற்கேற்ற வகையில் தைத்து அணிவித்தது போல இருப்பதாக இதைப் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
எம்ஜிஆர் சிலை சிக்னல் வழியாக திங்கள்கிழமை பயணித்த வாகன ஓட்டிகள், பேருந்து பயணிகள், பாதசாரிகள் இச்சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த புத்தாடையை ஆர்வமாக பார்த்துச் சென்றனர்.
காமராஜர் சிலைக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டது ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.