விழுப்புரம் அருகே அரசு பஸ்ஸை சிறைபிடித்து மாணவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், சாமிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விழுப்புரம், பில்லூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் கிராமம் வழியாக செல்லும் பேருந்துகளில் விழுப்புரத்துக்கும், பில்லூருக்கும் மாணவர்களுக்கான இலவச பயண அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் பல சமயங்களில் தங்கள் கிராமத்தில் நிற்பதில்லை என்று இப் பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் குற்றம் சாட்டி வந்தனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் சமயத்தில் காலியாக செல்லும் பேருந்துகள் கூட நிற்பதில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சாமிப்பேட்டையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விழுப்புரத்தில் இருந்து பில்லூர் நோக்கி வந்த இரு அரசு டவுன் பஸ்கள் மற்றும் பில்லூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ஒரு அரசு டவுன்ஸ் ஆகியவற்றை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸார் சாமிப்பேட்டை பகுதியில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.