சிதம்பரத்தில் பெண்களை வழிமறித்து நகைகளை பறிக்கும் தொடர் சம்பவம்: இருவர் கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை
சிதம்பரம் பகுதியில் மோட்டார் சைக்களில் சென்று பெண்களை வழிமறித்து நகைகளை பறிக்கும் இருவரை கடலூர் மாவட்ட தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று இளம்பெண்களிடம் நகைகள் மற்றும் பணத்தை பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா வழிபறி கும்பலை பிடிக்க இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தார்.
இந்நிலையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு சிதம்பரம் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பரங்கிப்பேட்டை ரங்கப்பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த கெளதமன் (24), மஞ்சக்குழியைச் சேர்ந்த கார்த்திக் (24) ஆகிய இருவரை பரங்கிப்பேட்டை அருகே புதன்கிழமை கைது செய்தனர். விசாரணையில் சிதம்பரம் முத்தையாநகரைச் சேர்ந்த வளர்மதி என்பவரை வழிமறித்து 4 பவுன் செயினை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதேபோன்று சிதம்பரம் புறவழிச்சாலையில் நர்சிங் மாணவி ஒருவரிடமும், நகரில் பள்ளி மாணவி ஒருவரிடம் செயினை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.