போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள்
ஒரு திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே கொள்ளையர்கள் மிக அருகில் வேறொரு கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மதுரை மேலூரில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே கொள்ளையர்கள் மிக அருகில் வேறொரு கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மதுரை மேலூரில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலுர் பகுதியில் உள்ள கூத்தப்பன்பட்டியில் நேற்று நள்ளிரவு 2 இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்துள்ளனர். மதுரை பிரதான சாலையின் அருகே இருவர் ஒரு வண்டியில் வெளியில் காத்திருக்க, இருவர் பாலசுப்பிரணியன் என்பவர் வீட்டுக்குள் புகுந்தனர். கதவைத் திறந்த பாலசுப்பிரமணியனை மிரட்டியதால், அவரும் பதிலுக்கு தாக்குதல் தொடுத்துள்ளார். மூவரும் கட்டிப் புரண்டுள்ளனர். பாலசுப்ரமணியன் விடாமல் சண்டை போட்டதால், அவர் சட்டைப் பாக்கெட்டில் இருந்த 1200 ரூபாயை எடுத்துக் கொண்டு இருவரும் வெளியில் வந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாலசுப்பிரமணியன் உடனடியாக மேலூர் போலீஸில் புகார் செய்தார்.
போலீசாரும் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் விசாரணை மேற்கொண்ட இடத்துக்கு மிக அருகில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்குள், கூத்தப்பன்பட்டி வடக்குப் பகுதியில் புதிதாகத் திருமணமான தம்பதியினர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்த அந்த நபர்கள், கத்தியைக் கழுத்தில் வைத்து மிரட்டி, பீரோவில் இருந்த 25 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம், செல்போன்களை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர்.
இது அந்தப் பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மோப்ப நாய், தடயவியல் நிபுணர்கள் மூலம் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மேலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.