மதுரையில் கடன் கேட்பவர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப் போட்டு 32 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 32 பவுன் நகையைக் கொள்ளை அடித்த நூதனத் திருடர்களை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
மதுரை கீரைத்துறையில் நாகுபிள்ளைதோப்பு பகுதியில் வசித்து வருபவர் சுலோசனா (65). திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வரும் இவர் வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் இவர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள், தாங்கள் அவரிடம் கடன் வாங்க வந்ததாகக் கூறியுள்ளனர்.
தங்களுக்கு ரூ.10 லட்சம் கடனாக வேண்டும் என்றும், வாரிசு யாரும் இல்லாத நிலையில், வீடு சொத்துகளை என்ன செய்யப் போகிறீர்கள், எங்களுக்கு கடனாகக் கொடுத்தாலாவது உங்களுக்கு புண்ணியம் என்றும் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு அந்த மூதாட்டி, இப்படி வழிப்பறி செய்யாதீர்கள், ஏமாற்றாதீர்கள் கடவுள் தண்டனை கொடுப்பார் என்று அறிவுரை கூறியுள்ளார்.
கடவுள் எங்களுக்கு தண்டனை கொடுப்பது இருக்கட்டும், அதே கடவுள் உனக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் பார் என்று கூறிய அவர்கள், மூதாட்டியின் வாய் கையைக் கட்டி, மரப்பெட்டியில் இருந்து,
32 பவுன் நகையை எடுத்துக் கொண்டார்கள். பின்னர், இரவு சமையலறைக்குச் சென்று, உணவுப் பொருள்களை எடுத்து, சமைத்து, தண்ணீர் கொடுத்து, காலையில் ஆறுதல் கூறிச் சென்றார்களாம். மேலும்,நாங்க ரொம்ப நியாயமானவர்கள் என்று கூறிச் சென்றதாக போலீஸில் மூதாட்டி புகாரில் கூறியிருக்கிறார்.
இந்தச் சம்பவம் குறித்து கீரைத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.