கடலூர் மாவட்டத்தில் திடீரென சுருண்டு விழுந்து இறக்கும் மாடுகள்!
கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகஅரசு நமக்கு கொடுக்க வேண்டிய நீரை தராததாலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டமன்னார்கோயில் வட்டங்களில் ஏரிகள், ஆறுகள்,
வறட்சியினால் போதிய பசுந்தீவனம் கிடைக்காததால் கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் சுருண்டு விழுந்து இறந்துள்ளன.
கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் பருவமழை பொய்த்ததாலும், கர்நாடகஅரசு நமக்கு கொடுக்க வேண்டிய நீரை தராததாலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டமன்னார்கோயில் வட்டங்களில் ஏரிகள், ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் முற்றிலும் வறண்டு போயின. கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம்ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக வறண்டு காட்சியளித்தது. மேலும் குறிப்பாக இரு வட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போய் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.
இதனால் இரு வட்டங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் குடிநீரின்றியும், பசுந்தீவனம் இன்றியும் வாழ்ந்து வந்தன. இவையல்லாமல் கொசுக்களும், ஈக்களும் பெருகியது. தற்போது கடந்த இரு மாதங்களாக கடலூர் மாவட்டத்தில் கால்நடைத் துறையினரால் தடுப்பூசி போடப்பட்டும் திடீர், தீடீரென மாடு மற்றும் கன்றுக்குட்டிகள் சுருண்டு விழுந்து இறந்து வருகிறது.இரு மாதங்களில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பசுந்தீவனம் இல்லாததாலும், கொசுக்கள் பெருக்கத்தால் மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இறந்து போவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கினறனர். கடலூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் சுமார் 52 மாடுகள் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி கிராமத்தில் சபாபதி என்பவருக்கு சொந்தமான மாடு, கன்றுக்குட்டியும், சிவாயத்தைச் சேர்ந்த ஜவகருக்கு சொந்தமான மாடும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்துள்ளது. இதனால் கிராமப்புறத்தில் ஆடு, மாடுகளை வைத்து வளர்த்து வரும் பொதுமக்கள் அவைகள் திடீரென சுருண்டு விழுந்து இறந்து போவதால் மிகுந்த அச்சத்திலும், வேதனையிலும் உள்ளனர்.
விவசாயத்தையே நம்பி வாழும் இக்கிராம மக்களுக்கு விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் கால்நடைகளை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் திடீரென இறந்து வரும் கால்நடைகளின் உயிரிழைப்பை தடுக்க போர்க்கால அளவில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.