சாதி மோதலுக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி, மேலநத்தம் கிராமத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து ஒன்றாகக் கொண்டாடுவது வழக்கம். இதேபோல, இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு சிலைகள் வைத்து வழிபாடு முடித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனத்துக்காக அனைத்து தெருக்களின் வழியாக ஊர்வலம் சென்றனர்.அப்போது, அம்மன் கோயில் அருகே மது அருந்திய நிலையில் இருந்த 6 பேர் ஊர்வலத்தை மறித்து தகராறு செய்தனர். போலீஸார் விரைந்து வந்து சமாதானம் செய்து ஊர்வலம் நடந்து முடிந்தது. அதே நாளில் இரவில் அந்த 6 பேரும் மேலும் சிலரை திரட்டி வந்து கும்பலாக கோஷ்டி மோதலில் ஈடுபட்டதால் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. அந்த 6 பேரும் தொடர்ந்து சாதிய மோதலை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படுகின்றனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலநத்தம் கிராமத்தில் அமைதி ஏற்படவும், கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு கிராம மக்கள் புதன்கிழமை திரண்டு வந்தனர்.
போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கச் செய்தனர். நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகரக் காவல் ஆணையரிடமும் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.