மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: ஆசிரியை கணவருடன் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவர் உயிரிழந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகர், ஸ்ரீராம் நகரில் புதியதாக வீடுகட்டி, குடியிருந்து வந்தவர் ஆரோக்கியம் மகன் ஜோசப் செல்வன் (52). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஊர் திரும்பியுள்ளார். இவரது மனைவி ஜாய் எலிசபெத் ஜெயராணி (50). இவர் சிவகாசி நகராட்சி அம்மன்கோவில்பட்டி உயர்நிலைப் பள்ளியில் வரலாறு பட்டதாரி ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சமையலுக்கு நண்டு, கோழிக்கறி வாங்கிக் கொண்டு கிருஷ்ணன்கோவில் நோக்கி மோட்டார் சைக்கிளிலில் வந்து கொண்டிருந்துள்ளனர். வரும் வழியில் இந்திராநகரில் சாலை ஓரம் கோழிக்குஞ்சுகள் விற்றுக் கொண்டிருந்துள்ளனர். அங்கு இரு கோழிகளை வளர்ப்பதற்காக வாங்கிக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளார்.
Advertisement
கூட்டுறவு நூற்பு ஆலையை அடுத்து மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிரே கோயமுத்தூரில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த ஈச்சர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆசிரியை ஜாய் எலிசபெத் ஜெயராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமுற்ற ஜோசப் செல்வன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருதுத்துமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்களது மகள் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பு படித்து வருகிறார். மகன் பொறியியல் பட்ப் படிப்பு முடித்து திருநெல்வேலியில் வேலை செய்து வருகிறார்.
கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் புளியங்குடியைச் சேர்ந்த பா.சுப்பையை (33) என்பவரைக் கைது செய்தனர்.