வீட்டுவசதி வாரிய நிலத்தை மீட்டு மகப்பேறு மருத்துவமனை: முதல்வருக்கு ஜி. ராமகிருஷ்ணன் கடிதம்
சென்னையில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்டு மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரர்
சென்னையில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்டு மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
1956 முதல் சென்னை சி.ஐ.டி. நகர் மனை எண் 150-ல் சமூக நலக் கூடம் செயல்பட்டு வந்தது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இந்த இடம், 1995-ல் ரணசிங் (எ) பால்துரைக்கு தவறான தகவல்களின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தவறாக மனை ஒதுக்கப்பட்டது தெரிந்ததும், அந்த ஒதுக்கீட்டை ஏன் ரத்து செய்யக் கூடாது எனக் கேட்டு ரணசிங்கிற்கு குடிசை மாற்று வாரியம் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். வீட்டுவசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகராய நகர் பகுதிக் குழு உறுப்பினர் வீரராகவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடம் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமானது என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் ரணசிங் மேல்முறையீடு செய்தார். அங்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.ஆனாலும், ரணசிங் ஆக்கிரமிப்பிலிருந்து அந்த நிலம் மீட்கப்படவில்லை. வீட்டுவசதி வாரிய அதிகாரிகளும் அவருக்கு உதவி வருகின்றனர்.
Advertisement
இது குறித்து கடந்த 15-3-2013-ல் தங்களுக்கு (முதல்வர்) கடிதம் எழுதி இருந்தோம். தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அந்த இடத்தை மீட்டு அங்கு மகப்பேறு மருத்துவமனை அமைக்க வேண்டும் என ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.