ஹெல்மட் அணிந்து வந்து மிளகாய்ப் பொடி தூவி பணப்பை பறித்தவர்களுக்கு வலைவீச்சு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் ஹெல்மட் அணிந்து வந்து மிளகாய் பொடியைத் தூவி, பணப் பையை பறித்துச் சென்ற இரு நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் ஹெல்மட் அணிந்து வந்து மிளகாய் பொடியைத் தூவி, பணப் பையை பறித்துச் சென்ற இரு நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் உள்ள கோதை நகரில் இதயம் தி என்ற நிதி நிறுவனம் உள்ளது. இதில் களப் பணியாளராக மதுரையைச் சேர்ந்த காந்தி என்பவரின் மகன் திருப்பதி (29) வேலை செய்து வருகிறார். புதன்கிழமை வசூலான பணம் ரூ.98 ஆயிரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்குரதவீதி-கீழரதவீதி சந்திப்பில் உள்ள ஒரு தனியார் வங்கிக் கிளையில் மாலை செலுத்தியுள்ளார். திரும்பி ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே திருப்பதி உடன் வேலை செய்யும் சின்னத்தம்பி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நிறுவனத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் ஹெல்மட் அணிந்த இருவர் வந்துள்ளனர். அப்போது இவர்கள் மிளகாய் பொடியை திருப்பதி மற்றும் சின்னத்தம்பி கண்களில் வீசியுள்ளார்கள். இதில் இருவரும் நிலைகுலைந்துள்ளார்கள். அப்போது இவர்கள் கொண்டு வந்த பணப்பையை ஹெல்மட் அணிந்து வந்த நபர்கள் பறித்துக் கொண்டு தப்பி விட்டார்களாம்.
இவர்கள் பணத்தைக் கொண்டு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பணத்தை கொள்ளையடிக்க நினைத்திருந்துள்ளார்கள். ஆனால் இவர்கள் பணத்தை வங்கியில் செலுத்தியதால் பணம் தப்பியது.
இது குறித்து புதன்கிழமை இரவு திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹெல்மட் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.