புதுச்சேரியின் பின்தங்கிய நிலைக்கு நாராயணசாமி, ரங்கசாமி தான் காரணம்: முன்னாள் எம்.பி. டாக்டர் மு.ராமதாஸ்
புதுச்சேரி மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி இருவரும் தான் காரணம் என முன்னாள் எம்.பி.யும், தற்போது சுயேச்சையாக
புதுச்சேரி மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி இருவரும் தான் காரணம் என முன்னாள் எம்.பி.யும், தற்போது சுயேச்சையாக போட்டியிடுபவருமான டாக்டர் மு.ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி அரசுக்கு நிதி நிலையில் பிரச்னை ஏற்பட்டு சிக்கலாகியுள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்திய அரசின் கொள்கை முடிவுதான் காரணம். மத்திய அரசு யூனியன் பிரதேசங்களுக்கு திட்டமில்லா செலவின நிதி, திட்ட செலவு நிதி தருகிறது.
திட்ட செலவு நிதியில் முன்பு 90 சதவீதம் மானியமாகவும், பத்து சதவீதம் கடனாகவும் மத்திய அரசு தந்தது. இந்த மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு தற்போது 30 சதவீதமாகியுள்ளது.
அதேநேரத்தில் திட்டக்கடனை கடந்த 2007-ல் நிறுத்தி விட்டது. இதனால் மத்திய அரசு திட்ட நிதியை பெற இயலவில்லை. இதனால் புதுவை கடன் தொகை ரூ.5650 கோடியாகியுள்ளது. இச்சூழலுக்கு முக்கியக்காரணம் மத்திய அரசுதான். இதை தீர்க்கவேண்டிய பொறுப்பு எம்.பி.க்கு உள்ளது.
தேர்ந்தெடுக்கும் எம்.பி., மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. மாநில அரசு நலன்கருதி செயல்பட வேண்டும். புதுச்சேரி அரசு பல்வேறு காலக்கட்டத்தில் மாநில அந்தஸ்துக்கு முயற்சித்தது. இதிலும் எம்.பி.யின் பங்கு அதிகம். சிறப்பு மாநில அந்தஸ்து கிடைப்பது கடினம்.
மாநில அந்தஸ்து வந்தால்தான் மத்திய அரசிடமிருந்து நிதி பெற நடவடிக்கை எடுக்க முடியும். எம்பியாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் நிதிசிக்கலை தீர்த்து வைக்க முடியும் என்றார். அப்போது செய்தியாளர்கள் ர் புதுச்சேரி மாநிலத்துக்கு சிக்கல் தொடங்கிய கடந்த 2007-ல் நீங்கள் தானே எம்.பி.யாக இருந்தீர்கள் எனறு கேள்வி எழுப்பினர்
அதற்கு டாக்டர் ராமதாஸ் பதிலளித்து பேசியதாவது; 2007-ல் பொதுக்கணக்கு தொடங்கப்பட்டது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதனால் தொடர்ந்து நிதி கிடைக்கும் என்று எண்ணினோம். இதற்காக ஒப்புதல் பெற வேண்டிய சூழல் இருந்தது. அடுத்து தேர்வான எம்.பி. நாராயணசாமி இப்பணியை செய்திருக்க வேண்டும். புதுவை மாநிலத்தின் தற்போதுள்ள பிரச்சினைக்கு ரங்கசாமியும், நாராயணசாமியும் தான் காரணம் என்றார்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்டு நான் பொதுமக்களின் வேட்பாளராக நிற்கிறேன்.
சுயேச்சையாக போட்டியிடுவதற்கு முன்பாகவே நான் பொதுநல அமைப்புகள், பல்வேறு தொண்டு அமைப்புகள், மாணவர்கள், அரசு ஊழியர்களிடம் ஆலோசனை செய்தேன்.அனைத்து தரப்பினரின் ஆதரவோடு நான் வரும் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றார் ராமதாஸ்.