பாபநாசம் அணை நீர்மட்டம் 42 அடியாக குறைந்தது: அணை மூடும் அபாயம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. புதன்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம்
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. புதன்கிழமை பாபநாசம் அணையின் நீர்மட்டம் 42.00 அடியாக இருந்தது. ஓரிரு நாளில் அணை மூடப்படலாம் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கத்தை விட 12.6 சதவிகிதம் மழை குறைவாக பெய்ததால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. எனினும் பிசான பருவ சாகுபடிக்கு முழுமையாக அணைகளில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டது. அறுவடை தொடங்கியதை அடுத்து மார்ச் மாதம் இறுதியில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிறது. தேவையை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் அணைகளில் குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்படுகிறது.
புதன்கிழமை (ஏப். 9 ஆம் தேதி) நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 42.05 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 55.08 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.68 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 45.39 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 8 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
கடனாநதி அணை மூடல்: பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 203.50 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 31.40 அடியாக இருந்தது. நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் அணை மூடப்பட்டது. ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 23.50 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 28.39 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும் இருந்தது.
வேகமாக குறைகிறது: பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் தேவைக்கு மே மாதம் இறுதி வரை குடிநீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அணையில் 25 முதல் 30 அடி வரை சேறு இருப்பதால் ஓரிரு தினங்களில் பாபநாசம் அணை மூடப்படலாம் என கூறப்படுகிறது.
மணிமுத்தாறு அணையில் உள்ள நீர் இருப்பை கொண்டு குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க வேண்டும்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கி அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கபெறும் வரை
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அணைகளின் தற்போதைய நீர் இருப்பு போதுமானதாக இல்லை. ஆகவே கடும் குடிநீர் தட்டுபாடு அபாயம் எழ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அணைகளில் இருந்து குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் தாமிரவருணி நதியில் நீர்வரத்து குறைந்து குடிநீர் திட்டங்களுக்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.