விருதுநகர் ரயில் நிலையத்தில் கிழக்கு பகுதி மக்கள் பயனடையும் வகையில் 4-வது பிளாட்பாரத்தை சீரமைத்து நுழைவு வாயில் அமைத்துக் கொடுப்பேன் என திமுக வேட்பாளர் ரத்னவேல் தெரிவித்தார்.
விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள 4-வது வார்டு, நாயக்கர் சாவடி, தந்திமரத்தெரு, சின்னப்பள்ளிவாசல் தெரு, மெயின் பஜார், தெப்பக்குளம் மேற்கு, நகராட்சி சலை உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் ரத்னவேல் தனது ஆதரவாளர்கள் ஆகியோருடன் பிரசாரம் செய்தார்.
அதில், ரயில்வே பீடர் சாலையில் உள்ள தந்திமரத்தெருவில் பொதுமக்களிடையே வாக்குகள் கேட்டு பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தின் தலைநகராக இருக்கிறது. ஆனால், அதற்குரிய அந்தஸ்து இல்லாமல் நகராட்சியாகவே காட்சியளிக்கிறது. மதுரை நகருக்கு ஈடாக மாற்றுவேன். இதேபோல், ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிருக்கிறது. இங்கு கிழக்கு பகுதியில் 4 -வது பிளாட் பாரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கான நடைமேம்பாலம் அமைத்து கொடுப்பேன்.
இங்கு வியாபாரம் அதிகளவில் நடைபெறுவதால், சிறிய அளவிலான தொழில் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. அதனால், பெரிய அளவிலான வாகனத் தொழிற்சாலையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் ஏற்பாடு செய்வேன். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் அருப்புக்கோட்டை, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கிறது. ஆனால், விருதுநகர் நகராட்சி பகுதிக்கு கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் இதுவரையில் கிடைப்பதற்கு அதிமுகவினர் நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். அதனால் இம்மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் படி பொதுமக்களை வேட்பாளர் ரத்னவேல் கேட்டுக் கொண்டார்.
அப்போது, உடன் மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.