அம்பை அருகே இளைஞர் கொலை: மைத்துனர் கைது
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தந்தை வீட்டில் இருந்த மனைவி அழைத்து வரச்சென்ற இளைஞரை அவரது மைத்துனர் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே தந்தை வீட்டில் இருந்த மனைவி அழைத்து வரச்சென்ற இளைஞரை அவரது மைத்துனர் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரவநல்லூர் பாரதிநகர் பொத்தையில் வசிப்பவர் முப்புடாதி மகன் முருகேசன் (30). கூலித் தொழிலாளி. இவரது மனைவி காந்திநகரை சேர்ந்த திருச்செல்வம் மகள் அம்பிகா (25). இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
சில தினங்களுக்கு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அம்பிகா, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாராம். வெள்ளிக்கிழமை மாலை மாமனார் வீட்டுக்கு சென்று முருகேசன், தனது மனைவி அம்பிகாவை வீட்டு வருமாறு அழைத்தாராம். அப்போது வீட்டில் இருந்து அம்பிகாவின் சகோதரர் மகராஜனுக்கும், முருகேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இந்த தகராறில் மகராஜன், அரிவாளால் முருகேசனை வெட்டினாராம். இதில் சம்பவ இடத்திலே முருகேசன் இறந்தார். தகவலறிந்த வீரவநல்லூர் போலீஸார், சென்று முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அனுப்பினர். வழக்குப் பதிந்து மகராஜனை (24) போலீஸார் கைது செய்தனர்.