பங்குனி உத்திரம்: சாஸ்தா கோயில்களில் பொங்கலிட்டு பக்தர்கள் வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சாஸ்தா கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபட்டனர். இதையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சாஸ்தா கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபட்டனர். இதையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பங்குனி உத்திரம் நாளில் குல தெய்வ சாஸ்தா கோயில்களுக்கு சென்று குடும்பம் தழைக்க வேண்டி, வழிபடுவார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பிரான்சேரி அருள்மிகு கரையடி மாடசாமி, வீரியப்பெருமாள் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு, அபிஷேகங்கள் நடைபெற்றது.
பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பொங்கலிட்டு குடும்பத்தினருடன் வழிபட்டனர். இக்கோயிலுக்கு பக்தர்கள் சனிக்கிழமை வரத்தொடங்கினர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே பாடகபுரம் அருள்மிகு பாடகலிங்கசுவாமி கோயிலுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். கோயில் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியன நடைபெற்றது.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பல்வேறு பகுதியில் இருந்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் தாமிரவருணி ஆற்றில் நீராடி பொங்கலிட்டு வழிபட்டனர்.
வீரவநல்லூர் வீர சாஸ்தா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோயில்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.