பல முயற்சிகளில் தப்பிய ரவுடி மதுரை அருகே வெட்டிக் கொலை
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டியை ஒரு கும்பல் மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்தது.
பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துப்பாண்டியை ஒரு கும்பல் மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்தது.
அவருடன் வந்த மேலும் மூவருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது.
முத்துப்பாண்டி திண்டுக்கல்லில் பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
பசுபதி பாண்டியனை கொலை செய்த வழக்கில் இவர் முக்கியக் குற்றவாளியாக உள்ளார். திண்டுக்கல் நீதிமன்றத்தில் இவர் ஆஜராக வந்த போது இவர் வந்த வாகனம் மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். அப்போது, அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபோல இவர் மீது பல முறை கொலை முயற்சி நடந்தது. எனினும், அவர் தப்பிவிட்டார்.
தமிழ் புத்தாண்டு மற்றும் பௌர்ணமி முன்னிட்டு, அழகர் கோயிலில் பூஜைகள் செய்து வழிபட முத்துப்பாண்டி நேற்று மதுரை வந்திருந்தார். நேற்று இரவே இவர் வந்து தங்கியிருப்பதை அறிந்த இவரது எதிரிகள், காலை 6 மணியளவில், அழகர்கோயிலில் உள்ள 18ம் படி கருப்பன்னசாமிகோயில் அருகே இவரை வெட்டிக் கொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே இவர் உயிரிழந்தார். மேலும் இவரோடு வந்த தாமரைச்செல்வன் (47), கண்மணி (26) ஆகியோருக்கு வெட்டுக் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு நபர் வெட்டுக்காயங்களோடு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
அப்பன் திருப்பதி மற்றும் ஊமச்சிக்குளம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.