மோடி மீது வழக்கு: ஞானதேசிகன் எச்சரிக்கை
வாக்காளர்களுக்கு கை சின்னம் பொறித்த கடிகாரங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி
வாக்காளர்களுக்கு கை சின்னம் பொறித்த கடிகாரங்களை காங்கிரஸ் கட்சியினர் வழங்குவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மறந்துவிட்டு நாலாந்தர பேச்சாளர் போல மோடி பேசி வருகிறார். பாஜக தேர்தல் அறிக்கையில் இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை குறித்து எதுவும் இல்லை. ஆனால், ராமநாதபுரத்தில் நின்று கொண்டு மீனவர்களின் நலனைக் காப்பேன் என்கிறார். ராகுல் காந்தியையும் இழிவுப்படுத்தி பேசி வருகிறார்.
Advertisement
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பொருளாதார சிக்கலில் தவிக்கும்போது, காங்கிரஸ் கட்சியினர் வீடுதோறும் கை சின்னம் பொறிக்கப்பட்ட கடிகாரங்களை விநியோகிப்பதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரங்களை அவர் அளிக்க வேண்டும். இல்லையெனில் பிரசாரத்தின்போது உண்மைக்கு மாறாகப் பேசி வருகிறார் என அவர் மீது வழக்கு தொடருவோம். வாக்களிக்க பணம் தருவதும், இலவசப் பொருள்கள் தருவதும் காங்கிரஸ் கலாசாரம் அல்ல. பணத்தை தண்ணீராக செலவு செய்வது காங்கிரஸ் கட்சியா பாஜகவா என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
காமராஜர் பிறந்த மண்ணில் மோடி மஸ்தான் வேலைகள் எடுபடாது என ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.