மெட்ரோ ரயில் : கடைகளை அகற்ற ஒரு மாத கால அவகாசம்
சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற மேலும் ஒரு மாத கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற மேலும் ஒரு மாத கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு அளித்துள்ளது.
சென்னை சென்டிரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சென்டிரல் டவர்ஸ் ஓட்டலும், அவுரா ஓட்டலும் அந்த அரசு நிலத்தில் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தன.
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்காக இந்த இடம் தேவை என்று தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. அரசும், அந்த நிலத்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தது. இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு பூந்தமல்லி சாலையில் இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்தது. மேலும் அகற்றப்படும் கடைகளுக்கு கட்டிட மதிப்பை கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் இழப்பீட்டை மெட்ரோ ரயில் நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து அந்த இடத்தை காலி செய்யும்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தனியார் நிறுவனத்தை கேட்டுக் கொண்டது.
ஆனால் இடத்தை காலி செய்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க மேலும் 6 மாத கால அவகாசம் கேட்டு ஓட்டல் நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக் மற்றும் இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ஓட்டல் நிர்வாகம் இன்னும் ஒரு மாதத்துக்குள் அந்த இடத்தைக் காலி செய்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். மேலும் ஓட்டல் நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்தும் அந்த நிலத்தின் உத்தேச மதிப்பு குறித்த விவரங்களையும் அவர்களுக்கு இரு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.