இணையதளத்தின் உதவியுடன் நேரலை மூலம் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நவீன ஊடகங்கள் மூலம் நேரலையில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நவீன ஊடகங்கள் மூலம் நேரலையில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவராக உள்ளதாலும், திமுக கூட்டணியில் போட்டியிடும் மற்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்திற்கு சென்று வந்ததாலும், சிதம்பரம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள திருமாவளவனுக்கு நேரம் இல்லாமல் போனது. மேலும் பல்வேறு சிக்கல்களால் மக்களை சந்திக்க முடியவில்லை.
அத்தகைய குறையினை போக்க இணையதளங்கள் மூலம் மென்பொருள் வடிவமைத்து குன்னம் மற்றும் காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள கிராமங்களில் திருமாவளவன் இணையதளம் மூலம் நேரலையில், மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும் ஏப்.20-ம் தேதி பரங்கிப்பேட்டையில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திருமாவளவன் பங்கேற்ற பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நேரலை மூலம் காட்டுமன்னார்கோயில் மற்றும் குன்னம் பகுதி கிராமங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த முயற்சி அனைத்து மக்களையும் இணையதளம் மூலம் நேரில் பார்த்து பேசுவதற்கும், அவர்களின் குறைகளை கேட்பதற்கும் ஏதுவாக இருந்ததாக திருமாவளவன் தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஊடக மை மாநில செயலாளர் அகரன், துணைச் செயலாளர் முதல்வன், கஜன்ராஜ், ராஜசிங்கம் ஆகியோர் கொண்ட குழுவினர் இந்த புது முயற்சியை செய்துள்ளனர்.