திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை: வானதிசீனிவாசன்
திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன்
திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் எஸ். சிவனணைந்தபெருமாளை ஆதரித்து, திங்கள்கிழமை திருநெல்வேலி நகரம், வாகையடி முனையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலர் வானதிசீனிவாசன் பேசியதாவது:
நடைபெறும் மக்களவைத் தேர்தல் இந்தியாவை ஆளும் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பதற்கான தேர்தல். முதல்வரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. காங்கிரஸ் ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் இல்லை. ஆகவேதான் மக்கள் காங்கிரஸ் மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.
நாடு முழுவதும் மோடியை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள். அதிமுக, திமுக யார் பிரதமர் என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய தயாராக இல்லை. 40 தொகுதிகளில் வென்று விட்டால் பிரதமர் ஆகி விட முடியாது. திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் கல்வி, வேலைவாய்ப்பில் வளர்ச்சி பெறவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை.ஆண்களின் வருமானத்தை டாஸ்மாக் மூலம் சுரண்டப்படுகிறது. மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசத் திட்டங்களால் என்ன பயன்? பெண்களை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை பெண் முதல்வர் மூடாதது ஏன்? விலைவாசி உயர்வு, மின்தடையால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறவில்லை. தாமிரவருணி நதி பாயும் இங்குள்ள விவசாயிகளுக்கு அரசு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அல்வா வுக்கு புகழ் பெற்ற திருநெல்வேலியில் இப்போது அரிவாள் கலாச்சாராம்தான் வளர்ந்து வருகிறது.திமுக, அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை. கல்வி, வேலை வாய்ப்பில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை.அதிமுகவுக்கு வாக்களிப்பது பயன் கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் அவர்.
பிரசாரத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணி தலைவி தமிழரசி,தேமுதிக மாநில துணைச் செயலருமான ஆர். உமாநாத், மாநகர் மாவட்டச் செயலர் ஏ. முகம்மதுஅலி, அவைத் தலைவர் ஜெயபாலன், கிழக்கு மாவட்டச் செயலர் கே. கணேஷ்குமார்ஆதித்தன், பாரதிய ஜனதா கட்சியின் கோட்டப் பொறுப்பாளர் எஸ்.வி. அன்புராஜ், மாவட்டத் தலைவர் கட்டளை ஜோதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மதிமுக மாநகர் மாவட்டச் செயலர் எஸ். பெருமாள், பாமக மாநில துணைப்பொதுச்செயலர் அ. வியனரசு மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.