வாக்காளர்களுக்கு ஆளும்கட்சியினர் பணம்பட்டுவாடா செய்ததை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தனது மனைவி வரலட்சுமியுடன் வியாழக்கிழமை வாக்களித்தார். பின்னர் அவர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியான சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன். அதிமுகவினர் வாக்குக்கு ரூ.200 கொடுத்திருந்தாலும் கூட, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி, லேடி, டாடி மூவருக்கும் மக்கள் டாட்டா காட்டி விடுவார்கள். ஈரோடு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் ஒரு வாக்குக்கு ரூ.200 கொடுத்திருக்கின்றனர். அதை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை.
இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்களை சொன்னாலும், அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வருவதே இல்லை. புகார் செய்தவரின் எண்ணை வாங்கிக் கொண்டு, 10 நிமிடத்திற்கு பின், நாங்கள் அங்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை என சொன்னபதிலையே திரும்ப திரும்ப சொல்கின்றனர்.
தொடக்கத்தில் கண்டிப்பாக இருந்த தேர்தல் ஆணையம், கடைசி நேரத்தில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததை தடுக்காமல் இருந்ததற்கு உள் காரணம் இருக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரி தான் பதில் சொல்ல வேண்டும்.
தேர்தல் ஆணையம் தன் கடமையில் இருந்து தவறி விட்டது. தேர்தல் ஆணையராக இருப்பவர் கண்டிக்கத்தக்கவர். இவ்வளவு மோசமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மனச்சாட்சி இல்லாமல் செயல்பட்டு இருக்கின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.