எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. கடிதம்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து விட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், அக்கட்சியின் எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு அவர் சனிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
16-வது மக்களவைத் தேர்தலையொட்டி அனைத்து எம்.எல்.ஏ.க்களின் தொகுதி அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இனி வாக்கு எண்ணிக்கை மட்டுமே நடைபெறவுள்ளது. தொகுதி அலுவலகங்கள் செயல்படுவதால் வாக்கு எண்ணிக்கைக்கு எந்த இடர்பாடும் ஏற்படப்போவதில்லை.
ஒரு மக்களவைத் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளும் ஒரு இடத்தில் மட்டுமே எண்ணப்படுகின்றன. உதாரணமாக, சிதம்பரம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அரியலூரில் நடைபெறவுள்ளது.
இதற்காக, அரியலூரில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை பூட்டி வைத்திருப்பது அவசியமற்றதாகும். மற்ற தொகுதி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
எம்.எல்.ஏ. அலுவலகங்கள் தொடர்ந்து பூட்டி இருப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அன்றாடப் பிரச்னைகளை அலுவலகத்துக்குள் வந்து முறையிடவோ, தீர்வு காணவோ முடியவில்லை.
எனவே, எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என தனது கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்