ஆழ்குழாய் கிணறுகளை மூடாத வாகன உரிமையாளர் மீது வழக்கு
ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்
ஆழ்குழாய் கிணறுகளை மூடாமல் விட்டால், அதனை அமைத்த வாகன உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆழ்துளை கிணறு தோண்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில் நடந்த கூட்டத்திற்கு, வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமை வகித்தார். என்எல்சி உதவி செயற்பொறியாளர், சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் பகுதிகளைச் சேர்ந்த வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறு தோண்டும் வாகன உரிமையாளர்கள், வாகன ஓட்டுநர்கள், டிரில்லிங் ஆபரேட்டர்கள், கிளீனர்கள் பங்கேற்றனர்.
Advertisement
கூட்டத்தில், கிணறு தோண்டும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தெரியும்படி அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். கிணறு தோண்டும் இடத்தைச் சுற்றி கம்பி வேலி போட வேண்டும். பணி முடிந்து ஆழ்குழாயில் தண்ணீர் வரவில்லையெனில் அவற்றை முழுவதும் மண் போட்டு மூடவேண்டும்.
தவறினால் சம்மந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்களும், விவசாயிகளும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.