ஜல்லிக்கட்டு, ரேக்ளா தடையால் மாடுகள் விற்பனை மந்தம்
பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுத்தாவணி நடத்தப்படுவது வழக்கம்
பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் நடைபெறும் மாட்டுத்தாவணியில் நூற்றுக்கணக்கில் மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. எனினும் ஜல்லிக்கட்டு, ரேக்ளாரேஸ் தடையால் மாடுகள் விற்பனை மந்தமாகவே உள்ளது.
பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆடித்திருவிழாவை முன்னிட்டு மாட்டுத்தாவணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை மாட்டுத்தாவணி துவங்கியது. சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் ஒருவார காலம் நடைபெறும் இந்த மாட்டுத்தாவணி சந்தையில் மணப்பாறை, கரூர், ஈரோடு, கொடுமுடி, பொள்ளாச்சி, அரவக்குறிச்சி, திருப்பூர் உள்ளிட்ட பல பல்வேறு ஊர்களில் இருந்தும் சுமார் 700 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாட்டின் பல்லை கணக்கிட்டும், சுழியை வைத்தும் நடைபெறும் இந்த சந்தைக்கு விவசாயிகள், மாட்டுத் தரகர்கள் என ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
ரூபாய் ஐந்தாயிரம் முதல் ஒரு லட்சம் வரை மதிப்பிலான மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் ஊரே திருவிழாகோலம் பூண்டுள்ளது. இங்குள்ளதால் ஊரில் திருவிழா களைகட்டியுள்ளது. ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி, உழவுப்பணி, ரேக்ளா ரேஸூக்கு என பல்வேறு வேலைகளுக்காக மாடுகள் குட்டி முதல் பெரியது வரையில் விற்பனைக்கு உள்ளது. இந்த முறை காங்கேயம் காளைகள் அதிகளவில் வந்துள்ளது. மாடுகளை ஏற்றி செல்ல டெம்போக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு வேண்டிய சலங்கை, சாட்டை, வார்கம்பு, மூங்கில் குச்சி, கொச்சுகயிறு, கழுத்துகயிறு, தும்பு, திருகுணி, அழகுபடுத்தும் மணிகள், கயிறுகள், கட்டிவைக்கும் கொழுக்கள், இரும்பு பொருட்கள் என இதற்கென ஏராளமான கடைகள் கண்ணைக்கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆடு அறுக்கும் கத்தி, அரிவாள், கருக்கறுவாள், தட்டுவெட்டும் அரிவாள், தென்னை மட்டை உரிக்கும் கொழு, சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, மம்பட்டி என விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இரும்பு சாமான்களுக்கு என தனி கடை வைக்கப்பட்டுள்ளது. இந்த மாட்டுத்தாவணியில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள காங்கேயம் காளை ஜோடி ஒன்று சுமார் ரூ.70 ஆயிரத்துக்கு விற்பனையானது. தமிழகத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆயிரக்கணக்கான மாடுகள் பங்கேற்கும் இந்த சந்தையில் ஆயிரத்துக்கும் குறைவான மாடுகளை இந்த முறை வந்துள்ளது.
மேலும் ஒருவாரகாலம் நடைபெறும் இந்த சந்தை மூன்று நாட்களிலேயே முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கந்தப்பகவுண்டன்வலசை சேர்ந்த செல்வம் கூறுகையில், சுப்ரீம்கோர்ட்டின் ஜல்லிக்கட்டு, ரேக்ளாரேஸ் தடையால் மாடுகளின் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் மாடுகளை விற்பவர்களும், வாங்குபவர்களும் குறைந்துவிட்டனர். கடந்த ஆண்டு வரும் காலத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான இவை இரண்டையும் அரசு தடையின்றி கொண்டாட வழிவகை செய்தால் மட்டுமே காங்கேயம் காளை போன்ற இனத்தை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் சிறந்த இனகாளைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மாடுகள் பங்கேற்ற சந்தையில் தற்போது வெறும் ஐநூறு, எழுநூறு மாடுகளே வந்துள்ளது. தஞ்சை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவோரும் வரவில்லை என்றார். ஒரே நிறம், ஒரே அளவிலான கொம்பு, அழகான உடல்வாகு உடைய காளைகளை பலரும் விரும்பி வாங்கினர்.மாட்டின் உரிமையாளர்கள் ஐந்து நாட்கள் மாட்டை நிறுத்தும் நிலையில் அவற்றுக்கு வேண்டிய மக்காசோளதட்டு, பச்சை மற்றும் குடிநீர் என அனைத்துக்கும் மாட்டுத்தாவணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.