முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை. மாணவர்கள் வேலைநிறுத்தம்

கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:05 AM
பகிர்:

கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து அண்ணாமலைநகர் பூமாகோயில் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எஸ்சி., எஸ்டி மாணவர்கள் செலுத்தக்கூடிய எந்தவித கல்வி கட்டணத்திற்கும் அபராதம் கிடையாது என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், அரசிடம் இருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகையை உடனடியாக மாணவர்களுக்கு வழங்க வேண்டும், அரசாணை 92-ன் படி தமிழகஅரசு வழங்கியுள்ள ரூ.48 கோடி தொகையினை உடனே தலித் மாணவர்களுக்கு வழங்க வேண்டும், டிசி உள்ளிட்ட சான்றிதழ் பெறுவதற்கு ரூ.400 தொகை பெறுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வளர்மதி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பல்கலைக்கழக கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் புல பிரிவு மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை 21-ம் தேதி மாணவர்கள் கூட்டமைப்பினர் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்கலைக்கழக நிர்வாகம் ஒரிரு வாரத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்தனர். ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், வியாழக்கிழமை மீண்டும் தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கலைப்புல முதல்வர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இருமாணவர்கள் மயங்கி விழுந்தனர்: தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் மணிமாறன், பிரவீன்ராஜ் ஆகிய இருமாணவர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.