விருதுநகரில் பலே திருடர்: ஓடும் ஆட்டோவில் போலீஸ்காரரிடம் செயின், செல்போனை திருடியவர் கைது
விருதுநகரில் போலீஸாரிடம் 3 சவரன் நகை மற்றும் கைப்பேசியை திருடியது தொடர்பாக ஆட்டோ டிரைவரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்
விருதுநகரில் போலீஸாரிடம் 3 சவரன் நகை மற்றும் கைப்பேசியை திருடியது தொடர்பாக ஆட்டோ டிரைவரை மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் முருகேசபாண்டி(33). இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்பு பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து பணிமுடித்துக் கொண்டு உடல் நலம் சரியில்லாத நிலையில் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏறி அல்லம்பட்டி வீட்டுக்குச் சென்றாராம். அந்த ஆட்டோவை கம்மாப்பட்டியைச் சேர்ந்த நவமணியின் மகன் முருகபெருமாள்(29) என்பவர் ஓட்டினாராம். அப்போது, முருகேசபாண்டி உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ஆழ்ந்து தூங்கினாராம்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஆட்டோ டிரைவர் முருகபெருமாள், காவலர் அணிந்திருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியையும் திருடிக்கொண்டு அல்லம்பட்டி பகுதியில் இறக்கி விட்டுள்ளார். அதையடுத்து, சட்டைப்பையில் இருந்த கைப்பேசி மற்றும் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகை பார்க்கும் போது காணமல் போயிருந்தது.
Advertisement
உடனே இது தொடர்பாக விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் முருகேசபாண்டி புகார் செய்தார். அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரவீந்திரன் ஆட்டோ டிரைவர் முருகப்பெருமாளிடம் விசாரித்ததில் கைப்பேசி மற்றும் நகையை திருடியது தெரியவந்தது. அதையடுத்து, அவரிடம் இருந்து நகை, கைப்பேசி ஆகியவைகளை மீட்டனர். பின்னர் போலீஸார் முருகபெருமாள் மீது வழக்கு பதிவு கைது செய்தனர்.