நகராட்சி குடிநீர் வினியோகத்தில் குழாயில் மீன்குஞ்சுகளுடன் வந்த தண்ணீர்
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் மழை இல்லாததால் வறட்சி மாவட்டமாக திகழ்கிறது. இதில் பழனி நகரம் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறது. பழனிக்கு குடிநீர் வழங்கும் பாலாறு பொருந்தலாறு
பழனி நகராட்சி குடிநீர் வினியோகத்தின் போது குழாயில் மீன்குஞ்சுகளுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் மழை இல்லாததால் வறட்சி மாவட்டமாக திகழ்கிறது. இதில் பழனி நகரம் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகிறது. பழனிக்கு குடிநீர் வழங்கும் பாலாறு பொருந்தலாறு அணையில் தற்போது சொற்ப உயரத்துக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் பழனிக்கு வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வரும்போது மிகவும் கலங்கலாக இருப்பதாக நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் நகராட்சி நிர்வாகம் பணியாளர் பற்றாக்குறையால் கண்டுகொள்ளாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் பழனி அடிவாரம் போஸ்ட்டாபீஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்தது. வீடுகளில் குழாய்களில் தண்ணீர் பிடித்த பெண்கள் கலங்கல் நீரைத் தொடர்ந்து வந்த தண்ணீரில் மீன்குஞ்சுகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவித்ததாவது:-
நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகத்தில் போதிய அக்கறை காட்டுவதில்லை. தண்ணீரில் குளோரினேஷன் சரியாக செய்வதில்லை. தவிர பாலாறு நீரேற்றம் பகுதியில் சுத்திகரிப்பு பணிகள் செய்யப்படாமல் தண்ணீர் பழனிக்கு கொண்டு வரப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை குழாயில் ஏராளமான கண்ணாடிக்கெண்டை மீன் குஞ்சுகள் வந்துள்ளது என தெரிவித்தனர்.