முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி பாலாறு அணையில் தண்ணீர் குறைவால் மீன் வரத்து அதிகரிப்பு

அசைவ உணவு வகைகளில் ஆடு,கோழிக்கு அடுத்தபடியாக மீன் இருந்தாலும் ஆட்டு இறைச்சி விலை உயர்வு, கோழிக்கறியில் ரசாயன வீரியத்தின் பாதிப்பு ஆகியவற்றால் பலரும் மீன் இறைச்சிக்கு மாறியுள்ளனர்.  தவிர

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:07 AM
பகிர்:

பழனி அருகே பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் குறைந்து வருவதால் மீன்வரத்து அதிகரித்து வருகிறது.

அசைவ உணவு வகைகளில் ஆடு,கோழிக்கு அடுத்தபடியாக மீன் இருந்தாலும் ஆட்டு இறைச்சி விலை உயர்வு, கோழிக்கறியில் ரசாயன வீரியத்தின் பாதிப்பு ஆகியவற்றால் பலரும் மீன் இறைச்சிக்கு மாறியுள்ளனர்.  தவிர மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் ஆடு, கோழியை விட மீனில் அதிக அளவில் சத்து இருப்பதாக கூறுவதால் பலரும் மீனை நாடி வருகின்றனர்.  பழனியில் ஏராளமான கடல்மீன் விற்பனை செய்யும் கடைகள் இருந்தாலும், பழனியை அடுத்த பாலாறு பொருந்தலாறு அணையில் புதிதாக பிடிக்கப்படும் மீனுக்கு அதிக சுவை உள்ளதால் ரசிகர்கள் பலரும் உள்ளனர்.

இதனால் சாதாரண நாட்களில் சுமாரான கூட்டமும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் அதிக அளவு பொதுமக்களும் மீன்வாங்க இங்கு வருகை தருகின்றனர்.  காலை 9 மணியளவில் அணைப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் பரிசல்களில் கொண்டு வந்து மீன்வளர்ச்சிக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் மீன் விற்பனை ஒப்பந்தம் பெற்றவர்கள் மீனை விற்பனை செய்கின்றனர்.   தற்போது அணையில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் மீன் வரத்து அதிகமாக உள்ளது.  கட்லா, ரோகு, மிருகால், திலோப்பியா போன்ற வகை மீன்கள் இருந்தாலும் தற்போது ஆடி மாதம் என்பதால் கட்லா மீன்கள் அதிகமாக பிடிக்கப்பட்டு வருகிறது.

அணையில் நீர் இருந்தால் தினமும் சுமார் 200 முதல் 250 கிலோ வரையில் மீன்கள் கிடைத்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் ஆயிரம் கிலோ மீன் கிடைத்தது.   தினமும் 21 பரிசல்களில் மீன் பிடிக்கப்படுகிறது.  இவை தமிழகம் தவிர கேரளாவிற்கும் தற்போது கொண்டு செல்லப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட மீன்களில் பல மீன்கள் 10கிலோ எடை வரை இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.