பாளையங்கோட்டை விபத்து: மேலும் ஒரு பெண் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆனது
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை இறந்தார். இதனால் இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை இறந்தார். இதனால் இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பாளையங்கோட்டை தெற்கு பஜாரைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் குமார் (40). ஆட்டோ ஓட்டுநர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள், உறவினர்களுடன் திருச்செந்தூருக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சுற்றிபார்த்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் வி.எம்.சத்திரம் அருகே ஆரோக்கியநாதபுரம் பகுதியில் வந்தபோது காரும், எதிரே குற்றாலத்தில் இருந்து உடன்குடி நோக்கி சென்று கொண்டிருந்த வேனும் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் காரில் பயணித்த குமார், பாளையங்கோட்டையைச் சேர்ந்த லட்சுமி (35), வெங்கடேஸ்வரன் (48), ராமகிருஷ்ணன் (42) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காரில் பயணித்த பாளையங்கோட்டையைச் சேர்ந்த பொன்ராஜ் (29), சாந்திநகரைச் சேர்ந்த ஜெயந்தி (46) ஆகியோர் காயமடைந்தனர்.
இதேபோல வேனில் பயணம் செய்த பக்கீர்மைதீன் (65), இர்பான் (12) ஆகியோரும் காயமடைந்தனர். இவர்கள் 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, ஜெயந்தி திங்கள்கிழமை இறந்தார். இதையடுத்து இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.