பழனியில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சியில் தவித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தற்போது நிலவி வருகிறது. பழனி, தொப்பம்பட்டி பகுதிகளில் வறட்சி காரணமாக விளைநிலங்கள் முற்றிலும் காய்ந்து வெடித்துள்ளது.
குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பழனியில் வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயம் பொய்த்தன் காரணமாக கால்நடைகளை கூட வளர்க்க முடியாமல் விவசாயிகள் விற்று வருகின்றனர்.
இந்நிலையில் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீர்மழை பெய்தது.
பழனியில் பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பழனியில் இருந்து தொப்பம்பட்டி வரையிலும் மழையால் சாலையோரங்களிலும், விளைநிலங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. பழனியை அடுத்த வில்வாதம்பட்டியிலும் நல்லமழை பெய்ததால் சில தோட்டகிணறுகள் தண்ணீர் நிரம்பி நின்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பழனியை அடுத்த ஆயக்குடி, சண்முகநதி, கலையமுத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நல்லமழை பெய்துள்ளது.
இதனால் விவசாயத்துக்கு தயாராக முடியாவிட்டாலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.