கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் கதவணை: ஆட்சியர் சுரேஷ்குமார் ஆய்வு
கடலூர் காட்டுமன்னார்கோயில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைப்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400
கடலூர் காட்டுமன்னார்கோயில் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை அமைப்பது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் கடலூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த ஆதனூர்-குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி செலவில் கதவணை கட்டப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், பொதுப்பணித்துறை (திட்டம் உருவாக்கம்) தலைமைப் பொறியாளர் ஆர்.செல்வம் ஆகியோர் கதவணை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்க காட்டுமன்னார்கோயில் அருகே ஆதனூர்-குமாரமங்கலம் இடையே கட்டப்படவுள்ள பகுதியினை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தலைமைப் பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்தது: தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தை வடிவமைப்பு செய்து, இறுதி ஆய்வு செய்ய உள்ளோம். கதவணை அமைத்து நீரை தேக்குவதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், நீர் தேக்கும் போது ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வு காண்பது குறித்தும், கரைகளை பலப்படுத்துவது குறித்தும், போக்குவரத்திற்கு ஏதுவாக மாற்றுதல் குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். ஆய்வு செய்து முன்மாதிரி வரைவு திட்டத்தை அரசுக்கு சமர்பிக்க உள்ளோம். அதன்பிறகு அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் கதவணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தலைமைப் பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தது: கொள்ளிடம் ஆற்றில் கட்டப்படும் பாலத்துடன் கூடிய கதவணை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்தரக்கூடியது. இதற்கான பூர்வாங்க பணியை துறை அதிகாரிகள் தொடங்கியுளஅளனர். இந்த திட்டம் காட்டுமன்னார்கோயிலிருந்து சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வரை பயன்தரக்கூடியதாகும் என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார். ஆய்வின் போது ஆட்சியருடன் கண்காணிப்பு பொறியாளர் டி.பன்னீர்செல்வம், சிதம்பரம் செயற்பொறியாளர் பி.ராமமூர்த்தி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.