முகப்பு
தற்போதைய செய்திகள்

காங்கிரஸை மீட்க தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும்: ஞானதேசிகன்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்

Updated On : 20 ஆகஸ்ட், 2014 at 6:00 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:02 PM

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க, தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71-ஆவது பிறந்த தின விழா சத்தியமூர்த்தி பவனில் புதன்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்துக்கு ஞானதேசிகன், முன்னாள் மத்திய இணை அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எம். கிருஷ்ணசாமி, அகில இந்தியச் செயலாளர் டாக்டர் செல்லக்குமார், மாநிலப் பொதுச்செயலாளர் கே. சிரஞ்சீவி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஞானதேசிகன் தலைமையில் அனைவரும் நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் பேசியது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழர்களின் நலனுக்காகப் பாடுபட்டவர். அவர்களுக்காக பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர். ஆனால், அவரை தமிழகத்தில் வைத்து விடுதலைப் புலிகள் கொலை செய்துவிட்டனர். இதனால் தமிழகத்துக்கு களங்கம் ஏற்பட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீட்க, தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட வேண்டும். தொண்டர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும்போது, முக்கியமான விவாதங்களின்போதும் எதிர்க்கட்சித் தலைவல் இல்லாமல் இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.

தமிழக்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். விலையை உயர்த்துவதால் மது விற்பனை குறையாது. டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அவர்கள் வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.