விருதுநகர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை உதவி மருத்துவர் தலைமையில் தலா 3 பேர் கொண்ட 33 விரைவுக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் கே.செல்லச்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அண்டை மாநிலமான கேரளத்தில் வாத்துக்கள் மூலம் பறவைக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதை தொடர்ந்து, இம்மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள கோழிப்பண்ணைகள், வாத்துக்கள், தீவன மூலப்பொருள்கள், உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் இறைச்சிக் கூடம் ஆகியவைகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட இருக்கிறது. அதனால் இம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்களோ, கோழிப்பண்ணையாளர்களோ பறவைக்காய்ச்சல் குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. இதற்காக, 1 கால் நடை உதவி மருத்துவர் தலைமையில் கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஆகிய 3 பேர் கொண்ட குழு என மொத்தம் 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஒவ்வொகு கோழிப்பண்ணை, வாத்துக்கள் உள்ள இடங்களுக்குச் சென்று இறப்பு ஏதாவது உள்ளதா என்றும், அப்படி இருந்தால் எதனால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தடுப்பு நடவடிக்கை: இந்நோய் வராமல் தடுப்பதற்கு கட்டாயம் சுகாதார தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பினாயில், காரச்சோடா போன்ற கிருமி நாசினிகளை தெளிப்பான் மூலம் தெளிக்கவும், பார்மாலின் வாயு கொண்டு பண்ணை உபகரணங்களை சுத்தம் செய்ய வேண்டும். தீவனச்சாக்கு, முட்டை தட்டுபோன்ற பொருள்களை அப்புறப்படுத்தியும், வாகனங்கள் பண்ணையில் நுழைவதற்கு முன்பும் கிருமி நாசனி தெளிக்கவும் வேண்டும்.
கோழிப்பண்ணையில் வேலையாள்கள் தகுந்த பாதுகாப்பான மேலாடைகள், காலணிகள், முகமூடி அணிந்து பண்ணையினுள் செல்ல வேண்டும். பண்ணையைச் சுற்றியுள்ள தாவர களைகளை அகற்றி எலிகள் மற்றும் பூச்சிகள் வராமல் அப்புறப்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டு வெளிப்பறவைகள் வராமல் தடுக்கவும், கோழிக்கழிவுகள், கழிவு நீர், இறந்த கோழிகள், அழுகிய முட்டைகள் ஆகியவைகளை ஆழமாக தோண்டி புதைத்து கிருமி நாசினியை அவசியம் தெளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.