விருதுநகர் மாவட்டத்தில் 225 நெசவாளர்களுக்கு தலா ரூ.2.60 லட்சம் மதிப்பீட்டில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத வகையில் தமிழகத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்தில் ஊரக பகுதிகளிலோ, நகராட்சி பகுதிகளிலோ வறுமையில் வாழ்ந்து வருகிற, சொந்த நிலம் வைத்திருக்கிற கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் பசுமை வீடு அமைப்பதற்கு ரூ.2.60 லட்சம் அரசு முழு மானியம் வழங்குகிறது. இந்த வீடு 365 சதுர அடி பரப்பளவில் பிரதான அறை, படுக்கை அறை, சமையல் அறை, மழை நீர் சேகரிப்பு அமைப்பு, சுகாதார வளாகம் மற்றும் தாழ்வார வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் இத்திட்டம் 2013-14, 2014-15 ஆண்டு வரை அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு 225 வீடுகள் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.5.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 24 வீடுகள் முழுமை அடைந்துள்ளதாகவும், 201 வீடுகளுக்கு நிர்வாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.