தீபத் திருவிழாவின் பத்தாம் நாள்: தங்க ரிஷப வாகனத்தில் அருணாசலேஸ்வரர் வீதியுலா
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) இரவு, தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) இரவு, தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
இக் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவம்பர் 28-ம் தேதி ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம், டிசம்பர் 1-ம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதியுலா, இரவு 10 மணிக்கு வெள்ளித் தேரோட்டம், டிசம்பர் 2-ம் தேதி பிரசித்தி பெற்ற பஞ்ச ரதங்களின் தேரோட்டம் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
தங்க ரிஷப வாகனத்தில்...:
தீபத் திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதி எதிரே பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இரவு 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே வீதியுலா வந்தனர்.
தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த பஞ்சமூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு மகிழ்ந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.செந்தில்வேலவன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.