முகப்பு
தற்போதைய செய்திகள்

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் 8,000 கனஅடி உபரிநீர் திறப்பு: அருவிகளில் மீண்டும் வெள்ளம்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு 8,000 கனஅடி உபரிநீர் தாமிரவருணி

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வியாழக்கிழமை பகல் 12 மணிக்கு 8,000 கனஅடி உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டது. இதையடுத்து பாபநாசம் கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகள் நிரம்பின. புதன்கிழமை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததை அடுத்து அணைகளின் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.

பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 23, பாபநாசம் கீழ் அணை 7, சேர்வலாறு அணை 11, மணிமுத்தாறு அணை 8, ராமநதி அணை 2, கருப்பாநதி அணை 2, அடவிநயினார் அணை 2, நம்பியாறு அணை 8, கன்னடியன் அணைக்கட்டு 6, மூலக்கரைப்பட்டி 11, சேரன்மகாதேவி 5, ராதாபுரம் 8, நான்குனேரி 13.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு 3,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. பகல் 12 மணியளவில் இவ்விரு அணைகளுக்கும் நீர்வரத்து திடீரென கணிசமாக அதிகரித்தது. இதையடுத்து அணைகளில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது. பாபநாசம் அணையின் உபரிநீர் வழிந்தோடி வழியாக வந்து கொண்டிருந்த உபரிநீர் திறந்து விடப்பட்டதாக அணை வட்டாரங்கள் தெரிவி்த்தன. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 8,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் பாபநாசம் கீழ் அணை வழியாக கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி வழியாக தாமிரவருணி ஆற்றில் செல்கிறது.

8,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் இவ்விரு அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 144.91 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 111.80 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 84.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 82.00 அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 1,524 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 110 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 62 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

12 ஆயிரம் கனஅடி உபரிநீர்: கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 64.96 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 95.75 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணை நீர்மட்டம் 44.50 அடியாகவம், நம்பியாறு அணை நீர்மட்டம் 22.96 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 25.50 அடியாகவும் இருந்தது.

பாபநாசம், சேர்வலாறு அணைகளில் உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டதால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி உபரிநீர் செல்வதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →