பலாத்கார வழக்கு: நெல்லை நீதிமன்றத்தில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டு சிறை
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னையா மகன் மாணிக்கம் என்ற பேச்சிமுத்து (24). இவர் திருநெல்வேலி சந்திப்பிலுள்ள ஹோட்டலில் பணி செய்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் கோசலையம்மாள் மகள் ராஜகுமாரி (15). இவர் சந்திப்பில் உள்ள ஒரு போட்டோ கலர் லேப் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார்.ராஜகுமாரியை சந்தித்த மாணிக்கம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினாராம். கடந்த 26.03.2008 அன்று வேலை முடிந்து ஊருக்கு செல்வதற்காக சந்திப்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த ராஜகுமாரியை மாணிக்கம் என்ற பேச்சிமுத்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின்பேரில் சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. கலியமூர்த்தி, செவ்வாய்க்கிழமை குற்றவாளி மாணிக்கத்திற்கு இந்திய தண்டனை சட்டம் 363 ன் கீழ் 10 ஆண்டுகளும், 376 ன் கீழ் 10 ஆண்டுகளும், 417 பிரிவின் கீழ் 1 ஒரு வருடமும் சிறை தண்டனையும், தலா ரூ. 1,000 வீதம் 3 பிரிவுகளிலும் சேர்த்து ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சிறை தண்டனைய ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக மேகலாகென்னடி ஆஜரானார்.