பொதுமக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் திட்டம்: மாணிக் தாகூர்
மக்களுக்கான உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் திட்டம் மக்களவையில் கொண்டு வர இருப்பதாக மாணிக்கம்
மக்களுக்கான உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் திட்டம் மக்களவையில் கொண்டு வர இருப்பதாக மாணிக் தாகூர் எம்.பி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் ஸ்ரீமான் நாராயண்மடம் பணிக்கர் அறக்கட்டளையும் இணைந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு என்கிற தலைப்பில் சனிக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்ஜேம்ஸ் தலைமை வகித்தார். ஸ்ரீமான் நாராயண்மடம், பணிக்கர் அறக்கட்டளையின் நிர்வாகி பி.ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். கணக்காளர் ரெங்கநாதன் வரவேற்புரை வழங்கினார்.
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று, தமிழகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்து இளைஞர்களிடையே கேட்டறிந்தார். அப்போது, வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்னை, மின்சார பற்றாக்குறை, அரசு நலத் திட்டங்களை பெறுவதற்கு அலைக்கழிப்பு செய்யும் அதிகாரிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கிராமங்களுக்கு பஸ்வசதி குறித்து பிரச்னைகளை கூறினார்கள்.
Advertisement
இதைக் கேட்டறிந்து பின் அவர் பேசுகையில், நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதை மத்திய, மாநில அரசு ஆகியவைகள் நிவர்த்தி செய்து வருகிறது. ஆனாலும் பற்றாக்குறை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. இதை போக்குவதற்கு இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோர் சிந்தித்து செயல்பட்டால் பிரச்னைகள் முழுமையாக தீர்க்க முடியும். சொந்த நிலம் குறித்து தகவல் பெறுவதற்கு அதிகாரிகள் அலைகழிப்பு செய்தது குறித்து இளைஞர் குறிப்பிட்டார்.
இது போன்ற காலதாமத்தை போக்கும் வகையில், பொதுமக்களின் உரிமைகள் மற்றும் நலத்திட்டங்களை செய்து முடிக்காத அதிகாரிகள் மீது அபராதம் விதிக்கும் திட்டம், இம்மாதம் நடைபெற இருக்கிற மக்களவை கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்படவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.