பழங்கால நாணயங்கள் பண்பாட்டின் சின்னங்களாக திகழ்ந்துள்ளன: டிஎஸ்பி ஆர்.ராஜாராம்
சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் அங்காளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீல் மற்றும் சிமெண்ட் வியாபாரி வி.கே.தண்டபாணி (52) என்பவர் தான் 40 வருடங்களாக
பழங்கால நாணயங்கள் காலத்தின் சின்னங்களாகவும், பண்பாடு மற்றும் கலாச்சார சின்னங்களாகவும் திகழ்ந்துள்ளன என சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.
சிதம்பரம் மேலரதவீதி ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் அங்காளம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்டீல் மற்றும் சிமெண்ட் வியாபாரி வி.கே.தண்டபாணி (52) என்பவர் தான் 40 வருடங்களாக சேகரித்த பழங்கால நாணயங்களின் கண்காட்சியை அமைத்துள்ளார். இவர் தனது தந்தை தபால் தலைகளை சேகரித்து வந்ததை பார்த்து, 14 வயதிலிருந்து நாணயங்களை சேகரித்து வந்துள்ளார். அலுமினியம், காப்பர், பித்தளை, வெள்ளி, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 10 ஆயிரம் நாணயங்களை சேகரித்துள்ளார். ஒவ்வொரு நாணயங்களும் ஒரு வரலாற்றை கூறுவதாக அவர் தெரிவித்தார்.
வி.கே.தண்டபாணி சேகரித்து வைத்துள்ள நாயணங்களின் கண்காட்சியை சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:
ஆங்கிலேயர்களின் நாணயங்களில் குறிப்பாக ஒரு நாணயம் சொல்லப்பட்டது. அந்த நாணயம் மன்னன் எட்வர்டு செவன் உருவம் பொறித்த நாணயமாகும். அதன் வரலாறு என்னவென்றால் மன்னன் எட்வர்டு செவன் தனது சேரட்டில் சென்றபோது 12 வயது சிறுவன் அடிபட்டு இறந்து போனான். உடனடியாக அவர் தனது நாட்டில் உள்ள நீதிபதிகள் 5 பேரை அழைத்து தனது தகுந்த தண்டனை வழங்குமாறு வேண்டினார். நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு மன்னன் எட்வர்டு செவன் தனது செங்கோலையும், கிரீடத்தையும் பொருத்திக் கொள்ள கூடாது என தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பை மனமுவந்து மன்னர் ஏற்று செயல்படுத்தினார்.
அதனால் நாணயத்தில் மன்னன் எட்வர்டு செவனின் உருவம் கிரீடம், செங்கோல் இல்லாமல் பொறிக்கப்பட்டுள்ளது. பழங்கால வரலாற்றை குறிப்பிடும் நாணயங்களை சேகரித்து வாழ்நாள் சாதனை படைத்த தண்டபாணிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தெரிவித்தார். விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைப்புல முதல்வர் ஆர்.ராஜேந்திரன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் வாசகி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.