மாநில நெடுஞ்சாலைகள் பராமரிப்புப் பணியை தனியாருக்குவிட எதிர்ப்பு
மாநில நெடுஞ்சாலைகள் பராமரிப்புப் பணியை தனியாருக்குவிட எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்ச் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்க
மாநில நெடுஞ்சாலைகள் பராமரிப்புப் பணியை தனியாருக்குவிட எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்ச் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்று தமிழ்நாடு சாலைப்பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.அம்சராஜ் கூறினார்.
ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
திமுக ஆட்சியில் திருப்பத்தூர், வாணியம்பாடி, சேலம் வரையிலா சாலை, சேலம் முதல் மேச்சேரி வழியாக தொப்பூர் வரையிலான சாலை, ஈரோடு-பரமத்திவேலூர் சாலை ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க ரூ.50 கோடிக்கு அனுமதிக்கப்பட்டது.
Advertisement
இப்போது அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி, நாமக்கல், கரூர் கோட்டங்களில் உள்ள சாலைகளை தனியார் பராமரிக்க ரூ.232 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இதற்கான ஒப்பந்தப்புள்ளி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதே சாலைகளை சாலைப்பணியாளர்கள் மூலம் பராமரித்தால் ரூ.100 கோடி தான் அரசுக்கு செலவாகும்.
அதேபோல தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கி மாநில நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
சாலை பராமரிப்பை தனியாருக்கு விடுவதை கண்டித்தும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் மார்ச் 10-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
பேட்டியின்போது சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் எம்.பாலசுப்பிரமணியன், மாநிலப் பொருளாளர் இரா.தமிழ் ஆகியோர் பங்கேற்றனர்.