தமிழக முதல்வருக்கு, அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு நன்றி
கடந்த ஆண்டு டிச.21, 22 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு 2-வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் நேரில் வந்து வாழ்த்தியதோடு,
தமிழக பட்ஜெட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கென தனி ஒதுக்கீடாக மானிய நிதி ரூ.979.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சி.மதியழகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
கடந்த ஆண்டு டிச.21, 22 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்துப் பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு 2-வது மாநில மாநாட்டில் தமிழக முதல்வர் நேரில் வந்து வாழ்த்தியதோடு, எங்களது கோரிக்கைகளை பெற்று பரிசீலிப்பதாக கூறினார். அதன்படி தமிழக பட்ஜெட்டில் எங்களது முதல் கோரிக்கையான பல்கலைக்கழகங்களுக்கு என தனி ஒதுக்கீட்டின் கீழ் முதல் முறையாக ரூ.979.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழகத்தில் உயர்கல்வியை வளர்க்கும் உயரிய நோக்கத்தில் ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த தமிழகத்தில் உள்ள 18 பல்கலைக்கழகங்கள் புத்துணர்ச்சி பெற்று மிகப்பெரிய வளர்ச்சியடையும் என்பதில் ஐயமில்லை. பல்கலைக்கழகங்களில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும், காலி பணியிடங்கள் நிரப்பவும், மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கவும் உதவியாக இருக்கும். இந்த நிதிஒதுக்கீடு மூலம் தமிழகத்தில் கல்வி மிகப்பெரிய வளர்ச்சி பெற்று முதல்வரின் விஷன்-2023 திட்டம் நிச்சயம் நிறைவேறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என சி.மதியழகன் தெரிவித்தார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆர்.உதயசந்திரன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.