பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே திருமண நிதி உதவிதிட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்: அமைச்சர்ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் பெண்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக
தமிழகத்தில் பெண்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு தங்கம், நிதி உதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினராகளாக கலந்து கொண்டனர்.
இதில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசுகையில், மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்துகிறவர்கள் தான் மக்கள் தலைவர் என போற்றப்படுகிறார்கள். இதற்கு முந்தைய ஆட்சியில் குடும்ப மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தினர்.
Advertisement
ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதுபோன்ற திட்டத்தின் நோக்கமே பெண் கல்வியை ஊக்கப்படுத்துவதே ஆகும். மாணவ, மாணவிகளின் கல்வித் தகுதியை உயர்த்துவதற்கு 14 அம்ச திட்டங்கள், விலையில்லா பொருள்கள் வழங்குதல், பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, கறவை மாடுகள் வழங்கும் திட்டம் ஆகியவைகளை நிறைவேற்றி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், எந்தவொரு மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டங்களை, தமிழகத்தில் முன்னோடியாக முதல்வர் செயல்படுத்துகிறார். இந்நிதியாண்டில் பொதுமக்களை பாதிக்காத வகையில் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். முதல்வர் தமிழக மக்களை இதயத்தில் வைத்து அழகு பார்ப்பவர். ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைந்து வருவதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் 311 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 4 கிராம தாலிக்கு தங்கமும், கிராம நிர்வாக அலுவலர்கள் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 2 பேருக்கு நியமன ஆணை, மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை சார்பில் 19 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் கடனுதவி காசோலைகள் உள்ளிட்டவைகளையும் அமைச்சர்கள் ஆர்.உதயகுமார், கே.டி.ராஜேந்திபாலாஜி ஆகியோர் வழங்கினர்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் கி.கலாநிதி, வேலாயுதம், நகராட்சி தலைவர் மா.சாந்தி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் மூக்கையா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருப்பசாமி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.