முகப்பு
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டில் சென்று படித்தாலும் சொந்த நாட்டில் இளைஞர்கள் பணியாற்ற முன்வர வேண்டும்

வெளிநாட்டில் சென்று படித்தாலும், தங்களின் தாய் நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என இளைஞர்களை தேசிய பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் எச்.தேவராஜ் கேட்டுக்

Updated On : 15 பிப்ரவரி, 2014 at 5:52 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:54 AM

வெளிநாட்டில் சென்று படித்தாலும், தங்களின் தாய் நாட்டிலேயே பணியாற்ற வேண்டும் என இளைஞர்களை தேசிய பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் எச்.தேவராஜ் கேட்டுக் கொண்டார்.

     விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி வளாக அரங்கத்தில் சனிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு செயலாளர் மாதவன் தலைமை வகித்தார். முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக புதுதில்லி பல்கலைக்கழக மானியக்குழு துணைத்தலைவர் எச்.தேவராஜ் பங்கேற்று பேசுகையில், உயர் கல்வி பயில்வதற்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அங்கேயே கூடுதல் ஊதியம் என கருதி பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றனர். இனிமேலாவது இதுபோன்ற நிலையை மாற்றி, படித்து முடித்ததும் தாய் நாட்டிலேயே பணியாற்ற வேண்டும்.

     வாழ்க்கை பயணத்தில், உங்கள் கடின உழைப்பிற்கு கிடைத்த வெகுமதியே பட்டம் ஆகும். வாழ்க்கையில் உள்ள நிலையற்ற தன்மையை முழு நம்பிக்கையோடும், நேர் சிந்தனையோடும் எதிர்கொள்ள வேண்டும். நம்நாடு 11,12-வது திட்ட காலங்களில் உயர் கல்வியில் அதிகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த ஒராண்டில் மட்டும் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு இணையான கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 523-லிருந்து 573 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், மார்ச்-2011ல் கல்லூரிகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 32964 லிருந்து 35539 ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகமாகும்.

Advertisement

    கடந்த 62 ஆண்டுகளில் நமது நாடு வேளாண்மை, தொழில்துறை உள்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, அறிவுசார் சொத்து ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததுள்ளது. இந்நிலையில் நானோ தொழில்நுட்பம், உயிர் தொழில் நுட்பம், உயிர் பொறியியல் துறைகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி நிறுவனங்கள் பாடுபடுகின்றன. இதற்காக நமது கல்வி முறையை மாற்றுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு மாணவர்களுக்கு அடுத்த நிலையிலுள்ள ஆசிரியர்களின் பங்களிப்பு இல்லாமல் உயர் கல்வியின் நோக்கத்தை அடைய முடியாது. நமது நாடு வல்லரசாக திகழ 5.40 கோடி இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். இளைஞர்களை நம்பித்தான நாடு இந்தியா இருக்கிறது. எனவே பண்பாடு கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாணவ, மாணவிகளை தேசிய மானியக்குழு துணைத் தலைவர் தேவராஜ் கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் 726 பேருக்கு பட்டங்களை வழங்கினார். இதில், கல்லூரி தலைவர் ரத்தினசாமி, துணைத்தலைவர் குமரன் உள்ளிட்ட நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மகேசன், மேகலிங்கம், பி.சாமி உள்ளிட்டோர் செய்திருந்தன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.