மீனவர்கள் பிரச்னைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதியான தீர்வு காண வேண்டும்: டி.கே. ரெங்கராஜன் எம்.பி
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
தமிழக மீனவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கு உறுதியான தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் எம்.பி.
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது :
தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பது, பொருள்கள் மற்றும் மீன்களை பறிப்பது, படகுகளை சிறைப்பிடிப்பது போன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படையினர் தொடந்து மேற்கொண்டு வருவதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்கள் சுமூகத் தொழில் மேற்கொள்ளும் வகையில், 2 நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக, இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தனது செல்வாக்கு மற்றும் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் டி.கே. ரெங்கராஜன் எம்.பி.