போலி சான்றிதழ்:அண்ணாமலைப் பல்கலைக்கழக தனிஅதிகாரி மீது மோசடி வழக்குப் பதிவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தனிஅதிகாரியாக பணியில் சேர்ந்த செந்தில்குமார் (26) மீது பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தனிஅதிகாரியாக பணியில் சேர்ந்த செந்தில்குமார் (26) மீது பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார். இவர் கடந்த 2004-2008ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ எலக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் பெற்றுள்ளார். பின்னர் 2011-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிஇ போலி சான்றிதழை கொடுத்து திருவண்ணாமலை படிப்பு மையத்தில் தனி அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்.
தற்போது பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர் நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா உத்தரவின் பேரில் அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் சான்றிதழ்கள் உறுதித்தன்மை சான்று பெறும் பணியில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கண்ட செந்தில்குமாரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்ததை அடுத்து பல்கலைக்கழக பதிவாளர் என்.பஞ்சநதம் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்து, பணி நீக்கம் செய்து கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஆணை பிறப்பித்தார்.
இந்நிலையில் பதிவாளர் ந.பஞ்சநதம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், போலி சான்றிதழ் கொடுத்து பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து மோசடி செய்ததாக செந்தில்குமார் மீது புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.